ETV Bharat / state

காதலிக்க வற்புறுத்தி பெண் தீ வைத்து கொலை..!

author img

By

Published : Oct 21, 2022, 10:59 PM IST

2018ஆம் ஆண்டு தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி பெண்ணை தீ வைத்து கொலை செய்தவரின் தண்டனையை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது.

Etv Bharat
Etv Bharat

மதுரை: திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். ஏசி மெக்கானிக்கான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். 2018ஆம் ஆண்டு பிப்.16ஆம் தேதி, மாணவி பள்ளி முடிந்து தோழிகளுடன் வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த பாலமுருகன் மாணவியைத் தடுத்து நிறுத்தி தன்னை காதலிக்குமாறு தகராறு செய்துள்ளார்.

பின்னர் மாணவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் முழுவதும் எரிந்து தீக்காயமடைந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி 2018ஆம் ஆண்டு பிப்.27ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து பாலமுருகனைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி மதுரை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்து நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதில்,

  • காதலை ஏற்க மறுத்த பெண் உலகில் இருக்கக் கூடாது, வேறு யாருடனும் வாழக் கூடாது என முடிவு செய்து காதலிக்க மறுத்த மாணவியைக் கொலை செய்யும் முடிவுக்கு மனுதாரர் வந்துள்ளார்.
  • பெண்களுக்குத் தனது விருப்பத்தை முடிவு செய்ய உரிமை உண்டு என்பதைப் புரியாமல் கட்டாயப்படுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆண்கள் நினைக்கின்றனர்.
  • இந்தக் கால இளைஞர்கள் சுலபமாக உணர்ச்சி வசப்படுகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகள் மறுக்கப்படும்போது, பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கொடூர மன நிலைக்குச் செல்கின்றனர்.
  • இதனால் நமது கல்வி முறையில் நுண்ணறிவு அளவுகோலைக் காட்டிலும், உணர்வுப்பூர்வமான அளவுகோலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
  • உணர்வுப்பூர்வமான அளவுகோலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் இளைஞர் எவ்வளவு தான் திறமையானவராகவோ, வெற்றியாளராகவோ இருந்தாலும் அவரால் உணர்வுப்பூர்வமான சவால்களை எதிர்கொள்ளத் தயாராக முடியாது.

இந்த வழக்கில் மனுதாரர் மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபித்துள்ளது. இதனால் கீழமை நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முகாந்திரம் இல்லை. கீழமை நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பதிவு திருமணம் ரத்து - பெண்ணின் மிரட்டல் புகாரால் நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.